சென்னிமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில்
தந்தைக்கு உபதேசம் செய்தவர், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு உரைத்தவர், மலைக்கடவுள், தமிழ் கடவுள் என போற்றப்படுபவர் முருகப்பெருமான். இவரது அறுபடை வீடுகளுக்கு இணையாக போற்றப்படும், திருத்தலம் சென்னிமலையாகும். ஈரோடு மாவட்டத்தில் இருந்து, தாராபுரம் செல்லும் ரோட்டில், 30வது கி.மீ தொலைவில், மலை மீதுள்ள சிரகிரி வேலவன் என செல்லமாக அழைக்கப்படும் சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. உலகமெல்லாம் பாடப்படும் கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய தேவராயர், இந்த தலத்தில் உள்ள முருகபெருமான் முன்னிலையில் கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றினார்.
கோவில் பற்றிய வரலாற்று செய்திகள் :
�� நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. எனவே சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம்.
�� ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னிமலை என்று கூறுகின்றனர்.
�� பழமையான இக்கோவில், சிவாலயச் சோழர் என்ற மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். அம்மன்னன், ஒரு சமயம் நொய்யல் ஆற்றில் நீராடியபோது, இம்மலையை கண்டார். மலை மீது ஏறி, சிறிய கோவிலை தரிசித்தார். அப்போது, முருகப்பெருமானே, அர்ச்சகராக வந்து, தன்னைத்தானே பூஜித்து, மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கி அருளினார்.
கோவில் சிறப்புகள் :
�� கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் இத்தலத்தில் தான் நடந்தது.
�� இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம். மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.
�� 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாகும்.
�� வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள் :
�� சித்திரை முதல் பங்குனிமுடிய பன்னிரண்டு மாதங்களும் இங்கு திருவிழாக்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் தைப்பூசத் தேர் திருவிழா இங்கு முக்கிய திருவிழாவாகும்.
�� இக்கோவிலில் ஆறுகால பூஜை அனுதினமும் நடைபெறுகிறது. அமாவாசை, சஷ்டி, கிருத்திகையின்போது பக்தர்கள் வந்து போவார்கள்.
Comments
Post a Comment