நீங்கள் பிறந்த கிழமையின் படி செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதுதான் !!
ஒருவர் பிறந்த கிழமையில் எந்த மாதிரியான ஆன்மிக வழிபாட்டை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் :
ஞாயிறன்று அதிகாலையில் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது ஆரோக்கியமான வாழ்வை உண்டாக்கும். இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணியலாம். கிழக்கு திசை பயன்தருவதாக இருக்கும். அரசு வழிகளில் காரிய வெற்றி பெற சூரிய ஹோரை காலத்தில் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
திங்கட்கிழமை பிறந்தவர்கள் :
திங்கட்கிழமை அதிகாலையில் தாயை வணங்கி, அவரின் ஆசிகளை பெற்றுக்கொண்டு, வெள்ளை நிறப் பூக்களால் அம்பாளை வழிபாடு செய்து கற்கண்டு கலந்த நைவேத்தியமும் படைப்பது சிறப்பு. சந்தன நிறம், வெள்ளை ஆகிய நிறத்தில் ஆடைகள் அணிவது நன்மைகளை தரும்.
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் : செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அரளிப்பூ மாலை கொண்டு முருகப் பெருமானை வழிபட்டால், வாழ்வு வளம்பெறும். அன்று மாலை ஸ்ரீபைரவருக்கு துவரம் பருப்பால் செய்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. சிவப்பும், மஞ்சள் நிற ஆடைகளை அணிவது வெற்றிகளைத் தரும்.
புதன்கிழமை பிறந்தவர்கள் : புதன்கிழமை அதிகாலை துளசி, கற்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவதோடு, பாசிப்பயிறு சுண்டல் நைவேத்தியத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்ய வேண்டும். பச்சை மற்றும் இளநீலம் கலந்த நிறங்களில் ஆடை இருக்குமாறு தேர்ந்தெடுத்து அணிவது நன்மைகளை உண்டாக்கும்.
வியாழக்கிழமை பிறந்தவர்கள் : வியாழக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்னர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்லோகம் பாராயணம் செய்து, அவருக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். தங்க நிற ஆடைகளில் பிரதானமாக இருப்பது சாதகமான சூழல்களை ஏற்படுத்தும். வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை செய்வது நன்மைகளைத் தரும்.
வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் : வெள்ளிக்கிழமை அதிகாலையில் மல்லிகைப் பூக்கள் கொண்டு ஸ்ரீராஜராஜேஸ்வரி ஸ்லோகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபடலாம். வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது வெற்றியை தரும். பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்வது விசேஷம். வெள்ளியன்று வரக்கூடிய சுக்ர ஹோரை காலம், இவர்களுக்கு ஆன்மிக வெற்றிகளை தரக்கூடியது.
சனிக்கிழமை பிறந்தவர்கள் : சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ வில்வம் சாற்றி சிவபெருமானை வழிபடுவது நல்லது. ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. ஆடைகளில் நீலம் சார்ந்த வண்ணங்களை பயன்படுத்துவது பல நன்மைகளைத் தரும்.
Comments
Post a Comment